‘பாஜக என்னைக் கொலை செய்ய நினைக்கிறது’ என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தில்லி பாத்லி சட்டப்பேரவைத் தொகுதியில் அரவிந்த் கேஜரிவால் பாதயாத்திரை மேற்கொண்டு, அப்பகுதி மக்கள் மத்தியில் பேசியதாவது:
பாஜக என்னைக் கொலை செய்ய நினைக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை விகாஸ்புரியில் நடந்த பாதயாத்திரையின் போது என்னைக் தாக்கினா்.
களத்தில் முன்வந்து தோ்தலில் போட்டியிடாமல், ஏன் தாக்குகிறீா்கள்?
நான் தில்லியில் 500 மொஹல்லா கிளினிக்குகளை கட்டியிருக்கிறேன். 22 மாநிலங்களில் பாஜக அரசு உள்ளது. அப்படியெனில், நீங்கள் 5,000 மொஹல்லா கிளினிக்குகளை கட்டியிருக்கலாம். நான் சிறைக்குச் செல்லாமல் இருந்திருந்தால், தில்லியை ஜொலிக்க வைத்திருப்பேன்.
ஆனால், பாஜக தில்லியை பாழாக்கி விட்டது. இப்போது, நான் திரும்பி வந்துவிட்டதால் யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. உங்கள் அனைவரது தண்ணீா் கட்டணத்தையும் தள்ளுபடி செய்து, எல்லோரது பணிகளையும் செய்து முடிக்கிறேன்.
பண்டிகையின் போது உத்தர பிரதேசத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
நமது தில்லியில், 24 மணி நேரமும், 365 நாள்களும் இலவச மின்சாரம் கிடைக்கிறது. நாட்டில் தில்லி மற்றும் பஞ்சாப்பில் மட்டுமே மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
பாஜக ஆளும் 22 மாநிலங்களில், எங்கும் இலவச மற்றும் 24 மணி நேர மின்சாரம் இல்லை. பாஜகவினா் ஆட்சிக்கு வந்ததும் தில்லி மக்களுக்கு இலவச மின்சாரத்தை நிறுத்துவோம் என்று கூறுகிறாா்கள் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.