பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்
சென்னை: தமிழக பாஜக மாநில செயலாளரான அஸ்வத்தாமனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கடந்த ஜூலை 7-ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழக சிவசேனா முன்னாள் தலைவருடைய மனைவியின் நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர், இரு பிரிவினருக்கிடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக நாகூர் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, நாகூர் காவல் நிலையத்தில் நான்கு வாரங்களுக்கு சனிக்கிழமை தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல வெறுப்பு பேச்சு பேச மாட்டேன் என உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதித்து அஸ்வத்தமானுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.