இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: கேமரூன் கிரீன் அணியில் இல்லாதது ஆஸி.க்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மிட்செல் ஸ்டார்க் பதில்!
அறிமுக வீரருக்கு பாராட்டு
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமுக்கு மாற்று வீரராக கம்ரான் குலாம் அணியில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அறிமுக வீரராக களம் கண்ட கம்ரான் குலாம் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி பாகிஸ்தான் அணிக்கு உதவினார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 26 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அறிமுக வீரர் கம்ரான் குலாமை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பாராட்டியுள்ளார்.
இதையும் படிக்க: 1,338 நாள்களுக்குப் பின் சொந்த மண்ணில் பாக். வெற்றி! 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2 வீரர்கள்!
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாபர் அசாமின் இடத்தை நிரப்புவது ஒருபோதும் அவ்வளவு எளிது கிடையாது. பாபர் அசாம் இடத்தில் கம்ரான் குலாம் சிறப்பாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு கம்ரான் குலாம் கடந்து வந்த கடினமான சூழல்களை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால், நாங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தோம். அறிமுகப் போட்டியில் அவர் சதம் விளாசியது சிறப்பானது என்றார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.