பெருமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு மற்றும் பெரிய கொம்மேஷ்வரம் பகுதியில் பாலாற்றில் மழை வெள்ளம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருகாமையில் செயல்பட்டு வரும் சில தனியார் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இரவு நேரங்களில் நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் பாதிக்கப்படுவதாகவும், ஆடு மாடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதால் இதனை தடுக்கக் கோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தனர்.
இதையும் படிக்க |சென்னை தலைமைச் செயலகத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு!
மேலும் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஆம்பூர் சுத்திகரிப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் சில தனியார் தோல் தொழிற்சாலைகள் தற்போது மீண்டும் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டிருக்கும் செயல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காற்றில் பறக்கிறதா? என கேள்வி எழுப்பும் அந்த பகுதி மக்கள் பாலாற்றில் செல்லும் வெள்ள நீரை தேக்கி வைத்து நடவடிக்கை எடுக்காத அரசு, மழைக் காலங்களில் வரும் மழை நீரில் தோல் தொழிற்சாலை கழிவு நீரை தொடர்ந்து கலந்து விடுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என கிராம மக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.