Sunday, October 27, 2024

பிஞ்சுக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசத் தொற்று! தீர்வு என்ன?

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

டாக்டர் சதீஷ் சலூஜா

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவளிப்பதைவிட, குழந்தை வளர்ப்பில் மிக சவாலானது அவர்களை வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதுதான். ஏனெனில், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய்மார்களின் நிலைமை திண்டாட்டம்தான்.

குழந்தைகளுக்கு அதிகமாக தொற்றுகள் ஏற்படாமல் இருக்க, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க, கருவில் இருக்கும்போதே கர்ப்பிணிகள் சரியான ஊட்டச்சத்துள்ள நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுப் பொருள்களைச் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல தாய்ப்பாலும் நோயெதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது என்பதால் குறைந்தது 6 மாதத்துக்கு தாய்ப்பால் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எவ்வளவுதான் பாதுகாப்பாக வளர்த்தாலும் குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படுவது சாதாரணம்தான் என்றும் இப்போது குழந்தைகளுக்கு தீவிர சுவாசப் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக முன்கூட்டியே குறைப் பிரசவசத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

ஆர்.எஸ்.வி. வைரஸ்

29 வாரங்களில் பிறந்த ஒரு குழந்தைக்கு சுவாசிப்பதில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து இரண்டு மாதங்கள் சிகிச்சை தரப்பட்ட பின்னர் சரியானது. ஒரு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்கு மீண்டும் சுவாசிப்பதில் பிரச்னை இருந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆர்.எஸ்.வி. எனும் சுவாச ஒத்திசைவு வைரஸ் (Respiratory syncytial virus) தொற்று இருப்பது தெரியவந்தது. சுமார் ஏழு வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபின்னர் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம்(யுனிசெஃப்) தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2.4 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. எனவே, குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான இந்த தொற்று குறித்து பெற்றோர்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியமானது.

குறைப்பிரசவ குழந்தைகள்

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சாதாரணம் என்று பெற்றோர்கள் நினைக்கலாம். ஆனால், சமீபமாக ஆர்.எஸ்.வி. தொற்று பாதிப்பு அதிகம் இருப்பதால் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை என்றால், சளி பிடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அல்லது. ஏனெனில், மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை ஆர்.எஸ்.வி. தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

இந்த வகை தொற்று மூக்கு, தொண்டை, நுரையீரலை பாதிக்கும். இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளில் குறிப்பாக குறைப் பிரசவ குழந்தைகளில், இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படிக்க | மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படும் பதின்வயதினர்! ஏன்? தீர்வு என்ன?

அறிகுறிகள்

குளிர்தலில் தொடங்கி நிமோனியா அல்லது நுரையீரல் தொற்று வரை அறிகுறிகள் இருக்கலாம். தீவிரமாக இருந்தால், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான இருமல், உதடுகள், வாய் மற்றும் விரல் நகங்கள் நீல நிறமாக மாறுதல், சோர்வு, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.

நுரையீரல் அல்லது இதயத்தில் பிரச்னை, நரம்புக் கோளாறு உள்ள 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்த தொற்று ஏற்படும்பட்சத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த வைரஸ் தொற்றக்கூடியது, ஆர்.எஸ்.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது தும்மும்போது குழந்தைக்கு முத்தம் கொடுக்கும்போது பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபரின் மூக்கு, வாய், கண்களை தொடும் குழந்தைகளும் பாதிக்கப்படும்.

குழந்தைகள் பயன்படுத்தும் பொருள்கள், பொம்மைகள் போன்ற அசுத்தமான மேற்பரப்புகள் மூலமாகவும் பரவுகிறது.

இந்தியாவில் ஆர்.எஸ்.வி.

ஆர்.எஸ்.வி. தொற்று உலகளவில் குழந்தைகளின் உடல்நலக்குறைவுக்கும் இறப்புக்கும் மிக முக்கியமாக காரணமாக இருக்கிறது. 'தி லான்செட்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், 2019-ல், 3.3 கோடி குழந்தைகளுக்கு சுவாச நோய்த் தொற்றுகள் இருந்தன. இவர்களில் 5ல் ஒரு குழந்தையின் வயது 6 மாதத்துக்குள்பட்டது. இவர்களில் 14 லட்சம் குழந்தைகள் (6 மாதங்களுக்குள்பட்ட) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியாவில், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே பாதிப்பு விகிதம் 2.1% முதல் 62.4% வரை உள்ளது. மழை மற்றும் குளிர்காலமான டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இதன் பாதிப்பும் சற்றே அதிகமாக இருக்கும் என்றும் ஜூன் முதல் அக்டோபர் வரை அதைவிட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | முட்டையின் மஞ்சள்கருவை சாப்பிடக்கூடாதா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கிருமிகள் பரவுவதைக் குறைக்க குழந்தையை பராமரிப்பவர்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

தொற்று பாதிப்பு அதிகமுள்ள காலங்களில் குழந்தைகளை நெரிசலான பகுதிகளுக்கு கொண்டு செல்லக் கூடாது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை குழந்தைகளை தூக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. அவர்களின் அருகில் குழந்தைகளை வைத்திருக்கவும் கூடாது.

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமிருப்பதால் தாய்ப்பால் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அல்லது உடல்நலக்குறைவுள்ள குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பூசியை மருத்துவர்கள் பரிந்துரைப்படி போட்டுக்கொள்ளலாம்.

யாரேனும் புகை பிடித்தால் அருகில் குழந்தையை வைத்திருக்க வேண்டாம். புகையிலையில் உள்ள புகை, தொற்றை ஏற்படுத்தும்.

குழந்தைகள் இருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் படுக்கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

குழந்தைகளின் உடலில் போதுமான நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்வது முக்கியம்.

பரிசோதனை

ரத்த பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, மூக்குச்சளி மாதிரிகள், ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிதல் ஆகிய சோதனைகளின் மூலமாக ஆர்.எஸ்.வி. தொற்றைக் கண்டறியலாம். காய்ச்சல், நிமோனியா, இருமல் இருந்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், நரம்பு வழியாக திரவங்கள், செயற்கை ஆக்ஸிஜன் அல்லது வென்டிலேட்டர் கூட பயன்படுத்தப்படலாம்.

ஆர்.எஸ்.வி. தொற்று ஏற்படாமல்தடுக்க அதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். குறைப் பிரசவ குழந்தைகளுக்கு இதன் ஆபத்து அதிகம். எனவே, சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பாதிப்புகள் குறைவு.

மேலும் சளி, இருமல் ஏற்படாமல் இருக்க சிறுசிறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலே இதன் பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கலாம்.

லேசான பாதிப்புகள் இருக்கும்போதே மருத்துவரிடம் சென்று தேவையான நோயெதிர்ப்பு மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பது தீவிரத்தைக் குறைக்கும்.

(கட்டுரையாளர் – பச்சிளம் குழந்தைகள் மருத்துவர், சர் கங்காராம் மருத்துவமனையின் தலைவர்)

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024