அதானிக்காக மட்டும் பிரதமர் மோடியிடம் கடவுள் எப்படி உதவி கேட்கிறார் என்று புரியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இன்று பல்வேறு பகுதிகளில் பேரணியில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், 'தான் மனிதர் அல்ல, பிறப்பால் தொடர்பில்லாதவர்(உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை), கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்று பிரதமர் மோடியே கூறுகிறார். கடவுள் எதைச் செய்யச் சொல்கிறாரோ, அதை செய்வேன் என்று கூறுகிறார். அதானிக்காக மட்டும் கடவுள் எப்படி உதவி கேட்கிறார் என்று புரியவில்லை. பிரதமர் மோடி என்ன செய்தாலும் அது பணக்காரர்களுக்கு மட்டும்தான். விவசாயிகளுக்காக எதுவும் செய்வதில்லை.
இதையும் படிக்க | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – 3 சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவர முடிவு! சாத்தியமா?
ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் முதலில் செய்வது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார் விலையை வழங்குவோம். ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்குவோம். இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. மேலும் இந்த வேலைவாய்ப்பு அனைத்து சாதியினருக்கும் சரிசமமாக வழங்கப்படும். மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம்' என்று பேசினார்.
ஹரியாணாவில் வருகிற அக். 5 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அக். 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.