பிரதமர் மோடி, வெங்கைய நாயுடு சந்திப்பு!முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை சந்தித்தார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவை செவ்வாய்க்கிழமை புது தில்லியின் தியாகராஜ மார்க்கில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். இருவரும் தேசிய நலன் சார்ந்த தகவல்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ வெங்கைய நாயுடு அவர்களை சந்தித்தேன். அவரோடு பல தசாப்தங்களாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவரின் ஞானத்தையும், ஆர்வத்தையும் போற்றுகிறேன். மேலும், அவர் நான் மூன்றாவது முறையாக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுபற்றி முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ மூன்றாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துக்கள். அவருடன் தேசிய நலன் சார்ந்த விஷயங்களை பரிமாறிக் கொண்டேன். வரவிருக்கும் ஆண்டுகளில் அவரது தலைமையின் கீழ் இந்தியா புதிய உயரத்தை எட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.