பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் 29-ந் தேதி சதுர்த்தி விழா கொடியேற்றம்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா வருகிற 29-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாள் இரவு மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கற்பகவிநாயகர் வீதி உலா வருகிறார். 2-ம் நாள் இரவில் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் இரவில் பூத வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார். 4-ம் நாள் இரவு கமல வாகனத்திலும், 5-ம் நாள் இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ம் நாள் விழாவாக வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கற்பகவிநாயகர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் நாள் விழாவில் 4-ந் தேதி இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாள் விழாவான 5-ந் தேதி இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். 9-ம் நாள் விழாவான 6-ந் தேதி காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலையில் தேரோட்டமும் நடக்கிறது. மேலும் அன்று மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் நாள் விழாவாக 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் காலையில் கோவில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. மேலும் காலையில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் திருக்குளத்தில் எழுந்தருளுகிறார். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024