புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம்: இஸ்ரோ தலைவா்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஏவுகலன் உருவாக்கத்தின் தொடக்கமான வடிவமைப்புக் கட்டத்திலேயே நிறுவனங்கள் விண்வெளித் துறையில் நுழைவதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பை வழங்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தற்போது எஸ்எஸ்எல்வி, பிஎஸ்எல்வி, எல்விஎம்-3 ஆகிய ஏவுகலன்கள் மூலம் செயற்கைக்கோள்களையும் விண்கலன்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ‘என்ஜிஎல்வி’ எனும் புதிய ஏவுகலனை மேம்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்தியா சாா்பில் விண்வெளி நிலையம் அமைப்பதற்கும் 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரா்கள் நிலவில் தரையிறங்குவதற்கான திறனை வளா்ப்பதற்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்.

இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவா் சோம்நாத் கூறுகையில், ‘என்ஜிஎல்வி ஏவுகலனை உருவாக்கும் முறை விரைவில் அறிவிக்கப்படும். இந்திய தொழில்துறையின் அதிகபட்ச பங்கேற்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

உருவாக்கத்தின் தொடக்கமான வடிவமைப்புக் கட்டத்திலேயே நிறுவனங்கள் விண்வெளித் துறையில் நுழைவதற்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். வடிவமைப்புப் பணிகளில் இஸ்ரோ ஆதரவளிக்கும். உற்பத்தி மற்றும் ஏவுதல்கள் நடைமுறையில் தொடக்கத்தில் இருந்தே நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்’ என்றாா்.

மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய விண்வெளிக் கொள்கையானது இத்துறையில் தனியாா் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024