சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி உலகிலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த ராணுவ நிகழ்ச்சியாக புதிய சாதனை படைத்துள்ளது.
மெரீனாவில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் கண்டுகளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் மட்டும் 4 லட்சம் பேர் என்றும், மெரீனா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 6 லட்சம் மக்கள் கண்டுகளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய விமானப்ப படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய சாதனை
கடந்த ஒரு வாரமாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண பல்வேறு அண்டை மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்திருந்தனர்.
மேலும் படிக்க | சொல்லப் போனால்… மகளிரால் மட்டுமே முடியும்!
சென்னை மெரீனாவில் 4 லட்சம் மக்களும், மெரீனா சாலைகள், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் போன்ற இடங்களில் 6 லட்சம் பேரும் விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளித்துள்ளனர்.
இதனால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் நேரில் பார்த்த ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்துள்ளது சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி.
விமான சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்கியும், பாராசூட் மூலம் கீழே குதித்தும் சாகசத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தனர். பலர் தங்கள் செல்போன்களிலும் படம் பிடித்தனர்.