புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்தால், கடைகள் அடைக்கப்பட்டு, குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
முழு கடையடைப்பு
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனிடையே மக்களவைத் தேர்தல் வந்ததால், மின் கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நிறைவடைந்தவுடன், ஜூன் 16ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வை புதுவை அரசு அமல்படுத்தியது.
பண்டிகை நாள்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டம்!
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக, புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் இன்று முழு கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து புதுச்சேரியில் பெருமளவிலான பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை.
பள்ளிகளுக்கு விடுமுறை
முழு கடையடைப்புப் போராட்டம் காரணமாக பேருந்துகள், ஆட்டோக்கள் முழுவதுமாக இயங்குவதில் சிரமம் உள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகள் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.