புதிதாக வாங்கிய வாகனம் பழுதானதால், ஆத்திரத்தில் இருசக்கர வாகன விற்பனைக் கடைக்கு வாடிக்கையாளர் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கர்நாடகத்தின் கலபுராகி பகுதியில் செயல்பட்டு வந்த இருசக்கர வாகன விற்பனையகத்தில், 26 வயதான இளைஞர் முகமது நதீம் என்பவர் 20 நாள்களுக்கு முன் மின்சார இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த நிலையில், அந்த வாகனம் அடிக்கடி பழுதடைந்துள்ளது.
இதையடுத்து விற்பனையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு வாகனத்தை பழுது நீக்கி தரும்படி கூறியுள்ளார் வாடிக்கையாளர். வாகனத்தை வாங்கிய கடைக்குச் சென்று பல முறை புகாரளித்தும் அங்குள்ள ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செவ்வாய்க்கிழமை(செப்.10) இருசக்கர வாகன விற்பனைக் கடை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். அதில் கடையில் விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியுள்ளன. கடை திறக்கப்படுவதற்கு முன் தீ வைக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ள நிலையில், கடைக்கு தீ வைத்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.