புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் 54-ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் இன்று(செப். 9) நடைபெற்றது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலில், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
புற்றுநோய் சிகிச்சைக்கான செலவை குறைக்கும் வகையில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
ஐஜிஎஸ்டியை (ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி) எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்து முடிவெடுப்பதற்கான நோக்கத்தை செயலாளர்கள் குழு இன்று முடிவு செய்தது.
ரூ.2,000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி! தற்காலிகமாக ஒத்திவைப்பு!
ஐஜிஎஸ்டியில் உள்ள எதிர்மறையான விமர்சனங்கள் குறித்தும் விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இறுதி முடிவுவை எடுக்க வருவாய்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும்.
அமைச்சர்கள் கொண்ட 2 புதிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று, மருத்துவம் மற்றும் சுகாதார காப்பீடு. பிகார் துணை முதல்வர் தலைமையில் இக்குழு செயல்படும். இது தொடர்பாக ஆராய்ந்து அக்டோபர் 2024-க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். இந்த அறிக்கையின் அடிப்படையில் நவம்பரில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.