Friday, September 20, 2024

பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து – யு.பி.எஸ்.சி. அதிரடி

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் புனே கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் அந்தஸ்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பூஜா கேத்கர் (வயது34). விதிமுறையை மீறி தனது சொகுசு காரில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தியது, அலுவலகத்தில் தனியறை கேட்டு அடம் பிடித்தது, கூடுதல் கலெக்டரின் அறையை ஆக்கிரமித்தது போன்ற வெவ்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதையடுத்து வாசிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். சர்ச்சைகளுக்கு மத்தியில் பூஜா கேத்கர் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது குறித்து விசாரிக்க மத்திய அரசின் கூடுதல் செயலாளர் மனோஜ்குமார் திவேதி தலைமையில் ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இதற்கிடையே பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் நிலப்பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல அவரது தந்தை திலீப் கேத்கர் அரசு அதிகாரியாக இருந்த போது 2 முறை லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் பூஜா கேட்கர் தனது பெயர், தந்தை பெயர், தாய் பெயர், புகைப்படம், கையெழுத்து, இ-மெயில் ஐ டி, செல்போன் எண், முகவரி ஆகியவற்றை மாற்றி அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அவர் மீது போலீசில் மோசடி வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் பூஜா கேத்கர் முன் ஜாமீன் கோரி டெல்லி பட்டியாலா கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி தேவேந்திர குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் கோர்ட்டில் வாதங்களை முன்வைக்க உள்ளதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைத்தார்.அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, முன்ஜாமீன் மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் முறைகேடு புகார்களில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை, யு.பி.எஸ்.சி. ரத்து செய்துள்ளது. வருங்காலத்தில் அவர் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதில் இருந்து நிரந்தர தடை விதிக்கவும் யு.பி.எஸ்.சி. பரிந்துரை செய்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024