Sunday, October 27, 2024

பெங்களூரு கட்டட விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பெங்களூரு ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு. க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22.10.2024 அன்று பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்த விபத்தில் 8 நபர்கள் உயிரிழந்தனர்.

இதையும் படிக்க | கருப்பை வாய்ப் புற்றுநோய்: சென்னையில் மறுக்கப்படும் பரிசோதனை?

மேலும், இவ்விபத்தில் தமிழ்நாட்டிலிருந்து கட்டுமானப் பணிக்காக சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் மற்றும் சத்தியராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024