பெங்களூரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரூவில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையையடுத்து முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கட்டுமானப் பணியிலிருந்த 7 அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்தது. கன மழையால் ஹென்னூர், பாபுசாபாளையா பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் அதில் பணியாற்றி வந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், கட்டட உரிமையாளர் மற்றும் அவரது மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 4 மாடிகள் கட்ட அனுமதி பெற்று 7 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேசிய பேரழிவு மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று காலை இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் ஏழுமலை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.