Saturday, September 21, 2024

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; கொல்கத்தா காவல் ஆணையாளரை பதவி நீக்கம் செய்ய காலக்கெடு விதித்த மருத்துவர்கள்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நேற்றிரவு கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது, முதலில் எங்களுடைய கோரிக்கைகளை இன்று (செவ்வாய் கிழமை) மாலை 5 மணிக்குள் அரசு ஏற்க வேண்டும்.

அதன்பின்னரே, எங்களுடைய பணிநிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம். இல்லையெனில், மருத்துவமனைகளில் இன்று காணப்படும் நிலைமைக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என கூறினர்.

இந்த சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டம் ஒன்று நடந்தபோது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும்.

அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.

இதேபோன்று, சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

திருவிழாக்கள் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கொல்கத்தா காவல் ஆணையாளரை பதவி நீக்கினால், போராட்டம் இன்று மாலை 5 மணிக்குள் முடிவுக்கு வரும். அப்படி இல்லையெனில், போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024