கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது சஞ்சய் ராய்தான் என குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தி, அதனைப் பதிவு செய்து குற்றப் பத்திரிகையாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று (அக். 7) தாக்கல் செய்தது.
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலான விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரணை
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஆக. 9ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவத்தில், கல்லூரியில் ஒப்பந்த ஊழியராக, காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிவரும் சஞ்சய் ராய் என்பவர் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பெண் மருத்துவா் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக்கு மெஹபூபா முஃப்தி ஆதரவா?
இதனையடுத்து காவல் துறையிடமிருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இதில் மருத்துவமனையில் பணிபுரிந்த ஊழியர்கள், மருத்துவர்கள், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை வெளியிட சிபிஐ மறுப்பு தெரிவித்திருந்தது. பெண் மருத்துவா் கொலை தொடா்பாக சிபிஐ அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளதாகவும், அந்த விவரங்களை வெளியிடுவது சிபிஐ விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அதனை வெளியிட முடியாது என திட்டவட்டமாகக் கூறியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தி சேகரிக்கப்பட்ட தகவல்களை குற்றப்பத்திரிகையாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது.
அதில், பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது சஞ்சய் ராய்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.