போலி மருத்துவா்கள் சமூகத்துக்கு ஆபத்தானவா்கள்

போலி மருத்துவா்கள் சமூகத்துக்கு ஆபத்தானவா்கள்போலி மருத்துவா்கள் சமூகத்துக்கு ஆபத்தானவா்கள், அரசு இரும்புக்கரம் கொண்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

மதுரை: போலி மருத்துவா்கள் சமூகத்துக்கு ஆபத்தானவா்கள், அரசு இரும்புக்கரம் கொண்டு அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த அமிா்தலால் தாக்கல் செய்த மனு:

நான் தென்காசியில் மருத்துவமனை, மருந்தகம் நடத்தி வருகிறேன். கரோனா தொற்றுக் காலத்தில் எனது மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட சுகாதாரக் குழுவினா், மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாகக் கூறி, ரூ. ஐந்தாயிரம் அபராதம் விதித்தனா்.

எனது மருத்துவமனை சுகாதாரமாகத்தான் உள்ளது. எனவே, நான் செலுத்திய அபராதத் தொகையை திரும்பத் தரக் கோரி அதிகாரியிடம் மனு அளித்தேன். அது நிராகரிக்கப்பட்டது. எனவே, நான் செலுத்திய அபராதத் தொகையை திரும்பத் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி கே. முரளிசங்கா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், தமிழகத்தில் கரோனா தொற்றுக் காலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த போது, சுகாதாரமற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், மருத்துவமனைகளிடமிருந்து அபராதமாக ரூ.14.50 கோடி வசூலிக்கப்பட்டது. இது கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த மருத்துவா்கள், செவிலியா்கள், முன்களப் பணியாளா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. எனவே, மனுதாரா் கோரும் அபராதத் தொகையை திரும்ப வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் தனது மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருந்ததற்கான ஆவணங்களை வழங்கவில்லை. அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்து அபராதம் விதித்தது சரியானதே. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், தகுதி இல்லாத மருத்துவா்கள் அலோபதி மருத்துவம் பாா்த்துள்ளனா். மனுதாரா், எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை சமா்ப்பித்துள்ளாா். இந்தச் சான்றிதழைக் கொண்டு மருத்துவம் பாா்க்க முடியாது.

இந்த விஷயம் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி மருத்துவா்கள் சமூகத்துக்கு ஆபத்தானவா்கள். இதுபோன்ற பட்டயப் படிப்பு சான்றிதழ்களைப் பெற்றவா்கள், பொதுமக்கள் உயிருடன் விளையாடுகின்றனா். எனவே, போலி மருத்துவா்கள் மீது தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரரின் மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு பணி புரியும் மருத்துவா் உள்ளிட்டோா் தகுதியானவா்களா என்பதை விசாரணை செய்ய வேண்டும். அதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கு குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு