சத்தீஸ்கரில் போலியான எஸ்பிஐ வங்கி கிளையைத் தொடங்கி, இளைஞர்களிடம் மோசடி செய்யப்பட்டது அம்பலமானது.
சத்தீஸ்கரில் உள்ள சபோரா கிராமத்தில் திடீரென செப். 18 ஆம் தேதியில் ஒரே இரவில் எஸ்பிஐ வங்கியின் போலியான புதிய கிளை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், சபோரா பகுதிக்கு அருகிலிருந்த தாப்ராவில் இருக்கும் எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர், போலியான கிளை மீது சந்தேகமடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து, செப். 27 ஆம் தேதியில் எஸ்பிஐ வங்கியின் போலியான சபோரா கிளையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில், சபோரா கிளையானது போலியாக இயங்கப்பட்டு வருவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த மோசடி சம்பவத்தில் அந்த போலி வங்கியின் மேலாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும், அசல் வங்கியைப் போன்று உருவாக்குவதற்காக, பெரும் பொருள் செலவில் போலியான வங்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி. : ஒரு மணி நேரத்தில் நடந்தது என்ன?
இந்த வங்கியின் பணியாளர் நியமன அறிக்கையை வெளியிட்டு, சிலரிடம் மோசடியும் செய்துள்ளனர். வங்கிக்கு மேலாளர்கள், மார்க்கெட்டிங் அதிகாரிகள், காசாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் இருப்பதாக விளம்பரம் செய்துள்ளனர். அதனை நம்பிய அப்பகுதி இளைஞர்கள் சிலர், 2 லட்சம் முதல் 6 லட்சம் வரையில் பணத்தை லஞ்சமாகக் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.
அவர்களை நம்ப வைக்கும் முயற்சிகளாக சலுகைக் கடிதங்கள், ஆவண சரிபார்ப்பு, நேர்காணல், கைரேகை அளித்தல் முதலானவற்றையும் கோரியுள்ளனர். அவர்களுக்கு பதவிகளுக்கேற்ப குறைந்தது ரூ. 30000 முதல் ரூ. 35000 வரையில் சம்பளம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். அதனை நம்பியே சிலர், நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஏமாற்றமடைந்தவர்களும் தற்போது சட்ட சிக்கலில் சிக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, போலி வங்கியென்று அறியாமல், யாரும் புதிய கணக்கினைத் தொடங்கியிருந்தால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.