மகளின் ஆசையை நிறைவேற்ற வான் சாகச நிகழ்வுக்கு அழைத்துச் சென்ற தந்தை உயிரிழப்பு – பெருங்களத்தூரில் சோகம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

மகளின் ஆசையை நிறைவேற்ற வான் சாகச நிகழ்வுக்கு அழைத்துச் சென்ற தந்தை உயிரிழப்பு – பெருங்களத்தூரில் சோகம்

பெருங்களத்தூர்: சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியை காண மகள் விரும்பியதால், மகளின் ஆசையை நிறைவேற்ற அழைத்துச் சென்ற தாம்பரம் அரசு மருத்துவமனை ஊழியரான சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் பெருங்களத்தூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்.6) பிரம்மாண்டமாக வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார்15 லட்சம் பேர் திரண்டனர். அந்த வகையில் புது பெருங்களத்துரை சார்ந்த ஸ்ரீனிவாசன் (48) தன் மகளுடன் நிகழ்ச்சியைக் காணச் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும், அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறத் தொடங்கியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. வெயிலும் அதிகமாக இருந்ததால் சுமார் 240-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அதில் 5பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதில் சீனிவாசனும் ஒருவர். இவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தொழில் நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு மகன் ஹேமந்த் (15) 11ம் வகுப்பு, மகள் வர்ஷா (11) 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவருடைய மகள் வர்ஷா சென்னையில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டதால் வேலை நாளான நேற்று (அக்.6) மாற்று விடுப்பு எடுத்துக் கொண்டு சீனிவாசன், தனது மகளை அழைத்துக் கொண்டு சென்னை மெரினாவுக்கு சென்றுள்ளார். சாகச நிகழ்ச்சி முடிந்து மகளுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிய போது சேப்பாக்கம் எம்எல்ஏ ஹாஸ்டல் சாலை அருகே திடீரென பைக்கில் இருந்து மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, அவரது, உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்தனர். முன்னதாக அதிமுக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மகள் வர்ஷாவின் மீது கொண்ட அதிகமான பாசத்தால், மகளின் ஆசையை நிறைவேற்ற வான் சாகச நிகழ்ச்சிக்கு சென்ற தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024