மகளிர் ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்திய இலங்கை

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

மகளிர் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் விளையாடின.

தம்புல்லா,

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை – வங்காளதேசம் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே அடித்தது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக நிகார் சுல்தானா 48 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் பிரபோதனி, பிரியதர்ஷினி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களம் இறங்கியது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷ்மி குணரத்ன மற்றும் சாமரி அதபத்து ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதபத்து 12 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹர்ஷித சமரவிக்ரம களம் இறங்கினார். விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷித சமரவிக்ரம இணை நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இதில் ஹர்ஷித சமரவிக்ரம 33 ரன்னிலும், விஷ்மி குணரத்ன அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து கவிஷா தில்ஹாரி மற்றும் ஹாசினி பெரேரா ஆகியோர் களம் இறங்கினர். இறுதியில் இலங்கை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

You may also like

© RajTamil Network – 2024