மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.
20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 12-ஆவது போட்டியில் இந்தியாவும் இலங்கையும் இன்று(அக். 9) பலப்பரீட்சை நடத்துகின்றன. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் திரட்டியது.
இந்திய அணியில் ஷஃபாலி வர்மாவும் ஸ்மிரிதி மந்தனாவும் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். ஷஃபாலி வர்மா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஸ்மிரிதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டி ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தன் பங்குக்கு மட்டையை சுழற்ற, இந்திய அணியின் ஸ்கோர் அசுர வேகத்தில் எகிறியது. இலங்கை அணியின் பந்துவீச்சை எல்லைக் கோட்டிற்கு அப்பால் பறக்கவிட்ட ஹர்மன்ப்ரீத் கௌர் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 173 ரன்கள் வெற்றி இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.