மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில்,”பாபா சித்திக்கின் மோசமான மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் முழுமையாக அவரது குடும்பத்தைப் பற்றியே உள்ளது.
மகாராஷ்டிரத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை இந்தப் பயங்கர சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் சம்பவத்திற்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பாபா சித்திக் கொலை: மருத்துவமனையில் குவிந்த பிரபலங்கள்! போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல்
பாபா சித்திக் கொலை
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்.
நிா்மல் நகா் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
பிரபல ரெளடி லாரன்ஸ் பிஸ்னொய்க்கு இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.