மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரை தொடர்ந்து, நிகழாண்டிலேயே மகாராஷ்டிரத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. தீபாவளிக்கு பின், நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து எதிர்வரும் தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க பாஜக – சிவசேனை(ஷிண்டே அணி) இணைந்துள்ள ‘மஹாயுதீ கூட்டணி’ ஆயத்தமாகி வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் ரூ. 7,600 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 9) மோடி அடிக்கல் நாட்டினார்.
அதன்படி, மகாராஷ்டிரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும்(ஐஐஎஸ்) பிரதமர் இன்று காணொலி வழியாக தொடக்கி வைத்தார். புதிய மருத்துவக் கல்லூரிகள் மும்பை, நாஷிக், ஜால்னா, அம்ராவதி, கட்சிரோலி, புல்தானா, வாஷிம், பந்தாரா, ஹிங்கோலி, அம்பேர்நாத்(தாணே) ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல, ஆரஞ்சு நகரமான நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர் மோடி, மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு, “ஒரு மொழிக்கு உரிய மரியாதை கிடைக்கும்போது, ஒட்டுமொத்த தலைமுறைக்கும் குரல் கிடைக்கப் பெற்றுள்ளதாக அர்த்தம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, “நாட்டின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. அதன்படி, நாங்கள்(மத்திய அரசு) வெறுமனே கட்டடங்களை மட்டும் கட்டவில்லை, ஆரோக்கியமான வளமையான மகாராஷ்டிரம் அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறோம்” என்றார்.