மகாராஷ்டிரம், ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளது.
தில்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிடுகிறார்.
மகாராஷ்டிரம் மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டியது அவசியம்.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் மொத்தம் 288 தொகுதிகளும், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் மொத்தம் 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சிவசேனை(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவார்) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது. அதேபோல், ஜார்கண்ட் மாநிலத்தை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது.
இதையும் படிக்க : வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது!
இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணியும், ஹரியாணாவில் பாஜகவும் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.