Monday, September 23, 2024

மகாவிஷ்ணு விவகாரம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறதா பள்ளி கல்வித்துறை..?

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி இருந்தது.

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ – புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த சூழலில், அரசு பள்ளிகளில் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணு, சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருவொற்றியூர் காவல்நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சரவணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மகாவிஷ்ணுவை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மகா விஷ்ணுவின் சர்ச்சைபேச்சு கண்டனத்துக்குரியது என்றும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரங்கள் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை 3 அலுவல் நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, விசாரணை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை நிறைவு பெற்றபின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024