மகா விஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவல்

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset

சர்ச்சை பேச்சு தொடர்பாக கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா், மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவா்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று அவா் பேசியது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது பேச்சைக் குறுக்கீடு செய்த பாா்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியா் சங்கரிடம் வாக்குவாதம் செய்து மகா விஷ்ணு பேசியதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன. அவா் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

மணிப்பூர் வன்முறை: ஆளுநரை சந்தித்தார் முதல்வர் பிரேன் சிங்

அதில், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக காவல் துறை உயா் அதிகாரிகள், சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து வந்தனர்.

சட்ட வல்லுநா்களின் அறிவுரையின்படி மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறையைச் சோ்ந்த ஒரு உயா் அதிகாரி தெரிவித்தாா். இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சீனுவாசன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

அவர் மீது மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா விஷ்ணுவை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்த்துக் குரல் கொடுத்த மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரியரிடம் மரியாதைக் குறைவாக பேசியதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இரண்டு அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024