மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின், 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக (செப். 18, 25, அக்.1) தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று(அக். 8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது.
இதில் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் மெஹபூபா போட்டியிடாத நிலையில், ஸ்ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா தொகுதியில் அவரது மகள் இல்திஜா முஃப்தி முதல்முறையாக போட்டியிட்டார்.
இதையும் படிக்க | ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் யார் முன்னிலை? 12 மணி நிலவரம்!
நண்பகல் 12 மணி நிலவரப்படி, இல்திஜா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர் பஷீர் அஹ்மத்தைவிட, 5 ஆயிரம் வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.
இதையடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். பிஜ்பெஹாராவில் உள்ள அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பும் பாசமும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தேர்தலுக்காக கடுமையாக உழைத்த எனது கட்சியினருக்கு நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.