சென்னைக்கு வரும் அக்.15 ஆம் தேதி கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பொதுவாக அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஓரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று (10-10-2024) மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (11-10-2024) காலை 8.30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரம் கடற்கரைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 13-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருக்க கூடும்.
இதையும் படிக்க: கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்
இந்த நிலையில், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.