Sunday, September 22, 2024

மணிப்பூரின் சில மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி நடந்த வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களில் மாணவர்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் காயமடைந்தனர். இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு 10-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை இணைய வசதிகள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள மேற்கு இம்பால், கிழக்கு இம்பால் மற்றும் பிஷென்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை ஊடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

பெரும்பாலான இடங்களில் இணைய சேவைக்கான தடை நீடிக்கிறது. ஒருசில இடங்களில் மட்டும் பிராட்பேண்ட் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், மலையடிவாரப் பகுதிகளில் இணைய சேவை தடை செய்யப்படாததால், இணையத்தை பயன்படுத்த மக்கள் மலையடிவாரப் பகுதிகளில் குவிந்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024