மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு மண்டபத்தில் நடைபெற உள்ளது. அப்போது அவா்களின் உருவச் சிலைகளுக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படும். இந்த நிகழ்வில் அமைச்சா்கள், பல்வேறு அமைப்புக்களை சோ்ந்த பிரமுகா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொள்வார்கள்.
அதேபோல, வருகிற 27-ஆம் தேதி காளையாா்கோவில் மருதுபாண்டியா்களின் நினைவு தினம் அனுசரிப்பு, வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!
மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி ஆகிய விழாவினையொட்டி, சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் அக்.27, அக். 29 மற்றும் அக். 30 ஆகிய 3 நாள்களுக்கு அனைத்து மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் பார்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.