மத்திய பிரதேசம்: டேங்கர் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இந்தூர் நோக்கி பால் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி செஹோர் மாவட்டத்தின் அருகில் உள்ள போபால்-இந்தூர் நெடுஞ்சாலையில் சென்ற போது பின்புறம் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி சின்மய் மிஸ்ரா கூறுகையில், "பார்வதி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தூர்-போபால் நெடுஞ்சாலையில் உள்ள அஷ்டா நகருக்கு அருகே அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் மகேஷ் தாக்கூர் (37), ரூப் சிங் தாக்கூர் (54) மற்றும் சுனில் மேவாரா (28) ஆகியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024