தனது மனைவி நலமுடன் வாழ வேண்டுமென்பதற்காக உண்ணா நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. ஒருவர்.
கணவர் ஆரோக்கியமாக நெடுநாள் வாழ வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் இல்லத்தரசிகள் கடைப்பிடிக்கும் விரதமே ‘கர்வா சௌத்’. இந்த விரதம் ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடப்படுகிறது.
வட இந்தியாவில் இவ்விரதம் ஐப்பசி மாதத்தில் பௌர்ணமி முடிந்து 4-ஆம் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் உள்ள குடும்பங்களில் ‘கர்வா சௌத்’ பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நோன்பாகும்.
திருமணமான சுமங்கலிப் பெண்கள் மட்டுமல்லாது, இன்னும் மணமுடிக்காத இளம்பெண்களும் இவ்விரதத்தை கடைப்பிடித்து தங்களுக்கு நல்ல கணவன் அமைய பிரார்த்திக்கின்றனர்.
இதையும் படிக்க: இறையருளால் மோடியைப் போன்ற நல்ல தலைவர்கள் உள்ளனர் -காஞ்சி சங்கராச்சாரியார்
இந்த நிலையில், தனது மனைவி கணக் கண்டெல்வாலுக்காக கடந்த 25 ஆண்டுகளாக இவ்விரதத்தை கடைப்பிடித்து வருகிறார் பாஜக எம்.பி. பிரவீண் கண்டெல்வால். எதற்காக இப்படி? தில்லியின் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பகிர்ந்துள்ள தகவல்களைப் பார்ப்போம்..
“ஒரு குடும்பத்தை இயக்கும் இரு சக்கரங்களாக கணவனும் மனைவியும் விளங்குவதாகவே நான் நம்புகிறேன். அப்படியிருக்கையில், கணவரின் நலனுக்காக மனைவி இவ்விரதத்தை கடைப்பிடிக்கும்போது, தங்களின் மனைவி ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ வேண்டுமென்பதற்காக கணவர்களும் ஏன் இவ்விரதத்தை கடைபிடிக்கக்கூடாது? நான் கடந்த 25 ஆண்டுகளாக இவ்விரதத்தை கடைப்பிடித்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:சொல்லப் போனால்… மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அன்பை வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில், இதுவும் அன்பின் வெளிப்பாடே..!