Saturday, September 21, 2024

மனைவியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் வெட்டிக்கொல்லப்பட்ட ரவுடி

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

மனைவியுடனான கள்ளக்காதல் குறித்து விஷ்ணுவிடம், லட்சுமணன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே தோட்டக்காடு மேட்டு காலனியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீஞ்சூர் போலீஸ் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவரது நண்பரும், கூட்டாளியுமான பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (26). இவரும் பிரபல ரவுடி ஆவார்.

இந்நிலையில் விஷ்ணு கூட்டாளியை சந்திக்க சின்னகாவனம் வரும்போது லட்சுமணனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் லட்சுமணனுக்கு தெரியவரவே அவருக்கும் மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. பின்னர் விஷ்ணு தோட்டக்காடு கிராமத்திற்கு நேற்று இரவு சென்றார். அங்கு லட்சுமணனும் சென்ற நிலையில் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மனைவியுடனான கள்ளக்காதல் குறித்து விஷ்ணுவிடம், லட்சுமணன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர். இதைத்தொடர்ந்து, அந்த கும்பல் அப்பகுதியில் தப்பி ஓடினர். அதில் காயம் அடைந்த லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படவே போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான விஷ்ணு மற்றும் அவரது கூட்டாளிகளை கொண்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் தோட்டக்காடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024