மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

பலத்த சூறாவளி காற்று வீசுவதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ராமேசுவரம் கடல் பகுதியிலும் சூறாவளி, கடல் சீற்றம் காரணமாக பாம்பனில் நேற்று விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதியில் உள்ள தீவுகளுக்கு படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து இயக்குவதும் தற்காலிகமாக பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண்டபம் காந்திநகர் பகுதி படகு தளம் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

You may also like

© RajTamil Network – 2024