Tuesday, September 24, 2024

மழலைகளிடம் பாலியல் சீண்டல்: தப்பிக்க முயன்ற குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

மகாராஷ்டிரத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த யுகேஜி குழந்தைகளுக்கு அதே பள்ளியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம், பெற்றோர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாணே மாவட்டத்தின் பத்லாப்பூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், கடந்த 12-ஆம் தேதியன்று, பள்ளி கழிப்பறைக்குச் சென்ற இரு குழந்தைகளையும் பின்தொடர்ந்து சென்ற பள்ளி ஊழியர், அங்கு அந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியதும், அந்த பிஞ்சுக் குழந்தைகள் பள்ளியில் நடந்த சம்பவத்தை தங்கள் பெற்றோரிடம் விவரித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின்பேரில், அதே பள்ளியில் துப்புரவுப் பணி உதவியாளராக பணிபுரிந்த அக்‌ஷய் ஷிண்டே என்ற நபர் கடந்த மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டது. குற்றம் நிகழ்ந்த பள்ளியின் தாளாளர் மற்றும் பள்ளிச் செயலர் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ், வழக்கு பதியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை(செப்.23) தலோஜா சிறையிலிருந்து அக்‌ஷய் ஷிண்டேவை விசாரணைக்காக பத்லாபூருக்கு அழைத்துச் செல்லும் வழியில், காவல்துறை வாகனத்திலிருந்து தப்பிக்க அவர் முற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காவல்துறை அதிகாரியிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்த காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதில் 2 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து தப்பித்து ஓட முயற்சித்த அக்‌ஷய் ஷிண்டேவை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முற்பட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த அக்‌ஷய் ஷிண்டே மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024