Friday, September 20, 2024

மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் மாதிரிகளை சோதனை செய்ய உத்தரவு

by rajtamil
0 comment 26 views
A+A-
Reset

மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் மாதிரிகளை சோதனை செய்ய உத்தரவு

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்செய்யாறு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், ஜோதிலட்சுமி தம்பதி. இவர்களது மகள் காவியா (6) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ம்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமி அங்குள்ள பெட்டி கடையில், ரூ.10 மதிப்புள்ள குளிர்பானம் வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறுமி குடித்த குளிர்பானத்தில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதிபோன்ற விவரங்கள் அச்சிடப்படாததால், காலாவாதியான குளிர்பானத்தை குடித்ததால்தான் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது:

சிறுமி குளிர்பானம் வாங்கிஅருந்திய பெட்டிக் கடையில்இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் 10முதல் 15 நாட்களில் வெளிவரும். அதேபோல, மாநிலம் முழுவதும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்களின் மாதிரிகளை சேகரித்துஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன், தயாரிப்பு ஆலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்ததற்கான காரணம், சோதனை முடிவு வந்தபிறகுதான் தெரியவரும். அதேநேரம் மாநிலம் முழுவதும், குளிர்பான தயாரிப்புஇடங்களில் அடுத்த ஓரிரு வாரங்கள் சோதனை தீவிரப்படுத்தப்படும்.

You may also like

© RajTamil Network – 2024