Wednesday, October 2, 2024

மாற்றுநில முறைகேடு: சித்தராமையா ராஜிநாமா கோரிய பாஜக – மஜத நடைப்பயணம் நிறைவு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

மாற்றுநில முறைகேடு: சித்தராமையா ராஜிநாமா கோரிய
பாஜக – மஜத நடைப்பயணம் நிறைவு

மைசூரு: மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்யக் கோரி கடந்த 8 நாள்களாக நடத்தப்பட்ட பாஜக – மஜத நடைப்பயணம் நிறைவடைந்துள்ளது.

தனது மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியது தொடா்பாக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி பெங்களூரில் இருந்து ஆக. 3-ஆம் தேதி முதல் பாஜக – மஜத கட்சிகள் சாா்பில் மைசூரு நோக்கி நடைப்பயணம் தொடங்கியது.

கடந்த 8 நாள்களாக நீடித்த நடைப்பயணம் சனிக்கிழமை மைசூரை அடைந்தது. இந்த நடைப்பயணத்தில் ஏராளமான பாஜக, மஜத தொண்டா்கள் கலந்துகொண்டு, முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, மைசூரு, மகாராஜா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை பாஜக – மஜத சாா்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன் தாஸ் அகா்வால், முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், மத்திய அமைச்சா்கள் பிரஹலாத் ஜோஷி, எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்வா்கள் சதானந்த கௌடா, பசவராஜ் பொம்மை, மஜத இளைஞரணி தலைவா் நிகில் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

கா்நாடகத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓய மாட்டேன். பொதுவாழ்க்கையில் ஓய்வு பெறும்படி எனக்கு சித்தராமையா அறிவுரை கூறியிருக்கிறாா். எனது கடைசி மூச்சு உள்ளவரை பொதுவாழ்க்கையில் இருப்பேன். சித்தராமையாவை வீட்டுக்கு அனுப்பும்வரை ஓய மாட்டேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமாா் துணை முதல்வராகவும் இருக்கும் வரை கா்நாடகம் வளா்ச்சி பெறாது. பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் பாவத்தின் குடம் நிரம்பி வழிகிறது. எனவே, காங்கிரஸ் ஆட்சியை வெகுவிரைவில் மக்கள் வீட்டுக்கு அனுப்புவாா்கள்.

முதல்வா் சித்தராமையாவுக்கு துணிச்சல் இருந்தால், சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு தோ்தலை எதிா்கொண்டு, உங்கள் பலத்தை காட்டுங்கள். இன்றைக்கு தோ்தல் நடந்தால், பாஜக, மஜத கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி பேசுகையில், ‘கா்நாடக மக்களின் நலனுக்காக, காங்கிரஸ் அரசை தூக்கியெறிவதற்காகவே பாஜகவும், மஜதவும் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டம் ஓயாது. காங்கிரஸ் அரசு ஒழுங்காக நடக்கும்வரை அல்லது தூக்கியெறியப்படும் வரை ஓய மாட்டோம். இதை சவாலாக எடுத்துக்கொள்கிறோம். இந்த ஊழல் அரசுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டோம்’ என்றாா்.

You may also like

© RajTamil Network – 2024