பெங்களூரு: மிகப்பெரிய விண்கல் ஒன்று, பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது.
அபோபிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் விண்கல், பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருப்பதாகவும் இது வரும் 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னங்களுக்கு பெயரிடுவது போல, பூமியை நோக்கி வரும் விண்கற்களுக்கும் பெயரிடப்படும். அந்த வகையில், எகிப்து நாட்டில், பிரச்னைகளுக்கான கடவுள் பெயரான அபோபிஸ் இந்த விண்கல்லுக்கு சூட்டப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய விண்கல், உண்மையில், பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு மிகப்பெரிய அபாயமாக இருப்பதாகவும், இதனை இஸ்ரோவின் விண்கல் கண்காணிப்பு அமைப்பானது தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும், அபோபிஸ் பூமியை மிக நெருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் வாழ்வதற்கு ஒரே ஒரு பூமிதான் உள்ளது, பூமிக்கு வரும் ஆபத்தை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும், இதற்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் வரும் ஆபத்துகளையும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்வோம் என்று ஊடகம் ஒன்றுக்கு இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ். சோம்நாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு அபோபிஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது மிகவும் நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது, அடுத்த விண்கல் பாதிப்பு 2029ஆம் ஆண்டில் நேரலாம், அதற்கடுத்து 2036ஆம் ஆண்டு நேரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்து நேரிடலாம் என்ற கவலை எழுந்துள்ளது. ஆனால் சில ஆய்வுகளோ, 2029 விண்கலம், பூமியை தாண்டிச் சென்றுவிடும் என்று தெரிவிக்கிறது.
பூமிக்கு, இந்த விண்கல் 32,000 கி.மீ. மேலே உள்ளது, இதுவரை இந்த அளவுக்குப் பெரிய விண்கல் பூமிக்கு அருகே வந்ததே இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.