மீட்டர் கட்டண உயர்வை வலியுறுத்தி நாளை ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டை நோக்கி பேரணி
சென்னை: ஆட்டோ – டாக்சி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகள் முடிந்துள்ளது.
இந்த உத்தரவை மதிக்காத மத்திய, மாநில அரசுகள், ஆன்லைன் அபராத முறையை அமல்படுத்தி ஆட்டோ தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றன. இதை கண்டித்து கடந்த ஆண்டு உண்ணாவிரதம், பேரணி போன்ற போராட்டங்களில் ஈடுபட்டோம். ஆனாலும், எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை.
எனவே, மீண்டும் அரசை வலியுறுத்தும் வகையில் நாளை (செப்.24) எழும்பூர் பழைய சித்ரா திரையரங்கில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். பைக் டாக்சிக்கு தடை, ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோவுக்கு விலக்கு, மீட்டர் கட்டண உயர்வு, ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் என்ற தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்துகிறோம். இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.