மும்பை: மும்பைக்குள் நுழையும் கார்கள், சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது, இன்று நள்ளிரவு முதலே அமலுக்கு வருவதாகவும், இதனால், சுங்கச் சாவடிகளில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டின் வணிக தலைநகராக இருக்கும் மும்பை மாநகரின் எல்லைக்குள் இருக்கும் ஐந்து சுங்கச் சாவடிகளிலும், இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இன்று மகாராஷ்டிர மாநில அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதையும் படிக்க.. 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மும்பைக்குள் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் நேரம் இதனால் மிச்சப்படுத்தப்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்றும், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு அறிவிப்பு இது என்றும் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் தாதாஜி, மும்பையில் உள்ள வைஷாலி, ஆனந்த் நகர் உள்ளிட்ட ஐந்து சுங்கச் சாவடிகளிலும் இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், இந்த சுங்கச் சாவடிகள் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இங்கு ரூ.45 முதல் ரூ.75 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது, இந்த விலக்கு 2026ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும், இந்த சுங்கச் சாவடிகளை ஒட்டுமொத்தமாக 3.5 லட்சம் வாகனங்கள் குறிப்பாக 2.80 லட்சம் இலகு ரக வாகனங்கள் கடந்துசெல்வதாகவும் அவர் தெரிவித்தார்.