முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

நாளை பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று கூறினார். மேலும் பிரதமரை நேரில் சந்திக்க மு.க.ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தார். அதன்படி நாளை காலை பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நாளை பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். நாளை காலை11 மணியளவில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார்.

பிரதமரை சந்தித்து முடித்ததும் நாளை மாலையே மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

You may also like

© RajTamil Network – 2024