பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ரூ.1.55 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள “தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்” திறந்து வைத்தல் தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மண்டபங்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் 28.10.2023 அன்று அறிவிப்பு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
தீபாவளி: சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான வழிகள்…
அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் அவர்களின் நினைவிடத்தில் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ. முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதல்வர் இன்றையதினம் திறந்து வைத்தார்.
இந்த அரங்கத்தின் மொத்த பரப்பளவு 9848.98 சதுர அடி ஆகும். இவ்வரங்கத்தில் பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடம் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கான நிரந்தர நிழற்கூரை ஆகியவையும், பொதுமக்களுக்கான காத்திருப்பு கூடத்தில் 500 ஆண்கள் மற்றும் 500 பெண்கள் தனித்தனியாக வரிசையில் செல்லும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி, சுப நிகழ்ச்சிகள் நடத்திட மேடை வசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறி வசதிகள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.