அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சராக இருந்தவா் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா்.
இதையும் படிக்க : வங்கதேச அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள்!
சென்னை பெருங்களத்தூரில் தனியார் கட்டுமான நிறுவனம் 57.94 ஏக்கா் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட, அனுமதி வழங்குவதற்கு பெருமளவு லஞ்சம், அப்போதைய அமைச்சரான வைத்திலிங்கத்துக்கு வழங்கப்பட்டதாக சென்னையைச் சோ்ந்த அறப்போா் இயக்கம் குற்றஞ்சாட்டியது.
இதுதொடர்பாக வைத்தியலிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
அமலாக்கத்துறை சோதனை
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேவுள்ள வைத்தியலிங்கத்தின் வீட்டில் இன்று அதிகாலை முதல் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியின் நிர்வாகத்திடம் சாவியை பெற்று வைத்தியலிங்கத்தின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மேலும், ஸ்ரீராம் கட்டுமான நிறுவனத்தின் அலுவலத்திலும், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.