கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பயணிகளால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பயணிகள் ரெயிலை நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னையில் இருந்து கிளம்பிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் நிறுத்தத்தில் நின்றபோது, முன்பதிவு செய்யாத பயணிகள் எஸ்1 பெட்டியில் அதிக அளவு ஆக்கிரமித்தனர். இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள், தங்களது இருக்கைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து அங்கிருந்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரை தொடர்பு கொண்டு கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முன்பதிவு செய்த பயணிகள், ரெயில் விருத்தாச்சலத்தை கடந்த பின் நடுவழியில் ரெயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரெயில்வே அதிகாரிகள் சமாதானம் செய்த பிறகு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து அரியலூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயில்வே பாதுகாப்பு படையினர் முன்பதிவு செய்யாத பயணிகளை மாற்று பெட்டிக்கு அனுப்பி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் நிலையில், ரெயில்வே நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.