மும்பையில் வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட 7,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செவ்வாய்க்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் தொடர்ச்சியாக அனந்த சதுர்தசி நாளில் நாடு முழுவதும் விநாயகர் சிலையை கரைக்கும் ஊர்வலம் நடைபெற்றது.
சிலைகள்
மும்பையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 7,500-க்கும் மேற்பட்ட விநாயகர் மற்றும் கௌரி தேவியின் சிலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.
மாலை 6 மணியளவில் கடல், ஏரிகள் மற்றும் செயற்கைக் குளங்களில் சமூக குழுக்கள் மூலம் வைக்கப்பட்ட 300 விநாயகர் சிலைகள் மற்றும் 50 கௌரி தேவியின் சிலைகள்,வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட 7,227 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் 2,880 சிலைகள் செயற்கைக் குளங்களிலும் கரைக்கப்பட்டன.
‘ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்’- ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ராகுல் வேண்டுகோள்!
ஊர்வலம்
திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் மத்திய மும்பையில் உள்ள புகழ்பெற்ற ‘லால்பாக்ஷா ராஜா’ விநாயகர் சிலை ஊர்வலம், கடற்கரைக்குச் செல்லும் வழியில் மாலை 6.30 மணியளவில் சின்ச்போக்லி கடற்கரையை அடைந்தது.
விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி மும்பையில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
பலத்த பாதுகாப்பு
விநாயகர் கரைப்பு ஊர்வலம் நடைபெறுவதையொட்டி 24,000 காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல இடங்களில் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கிர்கான், தாதர், பாந்த்ரா, ஜூஹு வெர்சோவா மற்றும் மத் தீவு போன்ற முக்கிய இடங்களிலும், போவாய் ஏரியிலும் காவல்துறை அதிகாரிகள் ட்ரோன்களை கண்காணிப்பில் ஈடுபட்டனர். 8,000 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.