“முஸ்லிம்களை இங்கு வாழ அனுமதித்தது மிகப்பெரிய தவறு”: கிரிராஜ் சிங்பாஜக அமைச்சர்கள் கிரிராஜ் சிங், ஹிமந்த பிஸ்வா சர்மா முஸ்லிம்கள் குறித்து கூறிய கருத்துகள்..கோப்புப் படம்
முஸ்லிம்கள் குறித்து பாஜக அமைச்சர்களான கிரிராஜ் சிங் மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் கூறிய கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் முஸ்லிம் அமைப்பு சார்பில் `பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் செய்யவோ, சரஸ்வதி பூஜை செய்யவோ, இந்துக் கடவுள்களின் பாடல்களை பாடவோ அரசு நிர்பந்திக்கக் கூடாது’ என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “1947-ல் மத அடிப்படையில் நமது நாடு பிரிக்கப்பட்டபோது, அனைத்து முஸ்லிம்களையும் நம் முன்னோர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால், தற்போது நாட்டின் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்.
மத அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டிருந்தால், முஸ்லிம்கள் ஏன் இங்கு இருக்க அனுமதித்தார்கள்? அன்றே அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இன்று இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்கள்.
முஸ்லிம்களை இங்கு வாழ அனுமதித்தது மிகப்பெரிய தவறு” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர் கடந்த ஜூன் மாதத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, முசாபர்பூரில் செய்தியாளர்களிடம், “முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களுக்காக வேலை செய்வதில் எனக்கும் விருப்பமில்லை. எங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப்பதற்காக அவர்கள் வழி தவறிவிட்டனர்” என்று பேசியிருந்ததும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.
மேலும், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கடந்த புதன்கிழமையில் (ஜூலை 17) பேசியதாவது, “அஸ்ஸாமில் தற்போது முஸ்லிம்களின் மக்கள்தொகை 40 சதவிகிதமாக உள்ளது. கடந்த 1951ஆம் ஆண்டில் 12 சதவிகிதமாக இருந்தது. இது எனக்கு அரசியல் பிரச்னை இல்லை. வாழ்வா? சாவா? பிரச்னை” என்று கூறியதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.