மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலம் குத்தகை ரத்துக்கு எதிரான வழக்க்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலம் குத்தகை ரத்துக்கு எதிரான வழக்க்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மெட்ராஸ் ரேஸ் கிளப் நிலத்துக்கான குத்தகை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் செப்.23-ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குதிரைப் பந்தயம் நடத்துவதற்காக சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ. 730.86 கோடியை செலுத்தவில்லை என்பதால் அந்த நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு கடந்த செப்.6 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், “வரும் செப்.24ம் தேதி அன்று இந்த 160 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கடைசி நாள் என்பதால், இந்த உரிமையியல் வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கக்கூடாது,” எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த உரிமையியல் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கக் கோரும் மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், “இந்த நிலத்தை அரசு இன்னும் தனது பொறுப்பில் சுவாதீனம் எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலத்தை ஒப்படைக்க வரும் செப்.24-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த உரிமையியல் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் அரசு தரப்பில் பதிலளிக்க காலஅவகாசம் வழங்கக்கூடாது” என வாதிட்டார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மற்றும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஆகியோர், “ஏற்கெனவே இந்த நிலம் சுவாதீனம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “கிண்டி ரேஸ் கிளப் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை அரசு இதுவரையிலும் சுவாதீனம் எடுக்கவில்லை என ரேஸ் கிளப் தரப்பிலும், ஆனால், ஏற்கெனவே சுவாதீனம் எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது என அரசு தரப்பிலும் மாறி, மாறி கூறப்படுவதால் இந்த உரிமையியல் வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரும் மனுவுக்கு வரும் செப்.23-ம் தேதிக்குள் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்” என அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்தார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024