சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கான நிதிப் பகிர்வு குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் கோரிக்கை வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.63,246 கோடி மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கான நிதிப் பகிர்வு குறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது. அதில், மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய அரசு' திட்டமாக, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தலித்துகளின் வரலாறு நீக்கப்படுகிறது: ராகுல் காந்தி!
இதுவரை இந்தத் திட்டம், மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் 'மாநில அரசு' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 65 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது.
இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும். பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.